புதுக்கோட்டை நகராட்சியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்




புதுக்கோட்டை நகராட்சியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நூற்றாண்டு நகராட்சி

புதுக்கோட்டை 1812-ல் துவங்கப்பட்ட நகராட்சியாகும். புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு கண்ட மிகவும் பழமையான நகராட்சியாகும். பாரம்பரியமிக்க புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டசபையில் புதுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது. மேலும் சட்டமன்றத்தில் இதற்கான சட்ட திருத்தமும் செய்யப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு கவர்னர் ரவியும் புதுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.புதிதாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சியில் 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 42 வார்டுகள் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்ந்த பின்னர் 60 வார்டுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சியின் கடைசி கூட்டம்

இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சியின் கடைசி கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமை தாங்கினார். துணை தலைவர் லியாகத் அலி, நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நகர்ப்புறவளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 248 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாய்கள் தொல்லை

கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பேசியதாவது:- நகராட்சியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் தூய்மையை பராமரிக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். இப்போது உள்ள பஸ் நிலையத்தை இடித்து புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்தும், குடிநீர் முழுமையாக கிடைக்கவும், தெரு விளக்கு சீரமைப்பது, கூடுதலாக பொக்லைன் எந்திரம் வாங்குவது குறித்து கூறினர். கூட்டத்தில் தொடர்ந்து தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், சுயேட்சை உறுப்பினர்களும் பேசினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments