திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயாரிப்பு அதிகாரிகள் தகவல்





திருச்சி  காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

தேசிய நெடுஞ்சாலை

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி–யில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரம் வரை செல்ல தேசியநெடுஞ்சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகனபோக்குவரத்து அதிகரித்தப்படி உள்ளது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி, ராமேசுவரத்திற்கு இந்த சாலையில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. எதிர்காலத்தில் இன்னும் வாகன போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய வாகன போக்குவரத்து அதிகரிப்பால் இரு வழிச்சாலையாக உள்ள இந்த பாதையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்துள்ளனர். இதில் முதல் கட்டமாக திருச்சியில் இருந்து காரைக்குடி வரை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான கருத்துரு மத்திய அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கும் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இத்திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை மற்றும் மதிப்பீடு தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

திட்ட மதிப்பீடு

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "திருச்சிஜகாரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 81 கிலோ மீட்டர் தூரம் 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது. திருச்சி அருகே மாத்தூர் ரவுண்டானாவில் இருந்து காரைக்குடி வரை இந்த சாலை அமையும். இந்த திட்டத்திற்கு போதுமான நிலம் உள்ளதா? கையகப்படுத்த வேண்டிய நிலம், சாலை அமைப்பதற்காக ஆகும் செலவுகள், என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக அறிக்கை தயாரிக்கப்படும்.

இதைத்தொடர்ந்து குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அந்த அறிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன்பின் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். இது இத்திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கை தான். நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியான பின்பு தான் பணிகள் தொடங்கும்'' என்றனர்.

சாலை விபத்து

திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் புதுக்கோட்டை மைய பகுதியாக உள்ளது. கார்கள், லாரிகள், பஸ்கள், சுற்றுலா வேன்கள் உள்பட கனரக வாகனங்கள் புதுக்கோட்டையை அதிகமாக கடந்து செல்கிறது. இந்த சாலையில் திருமயம் அருகே அடிக்கடி சாலை விபத்து நடைபெறுவது உண்டு. எனவே வாகன போக்குவரத்து அதிகரிப்பால் இந்த சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுவதன் மூலம் வாகனங்கள் எளிதாக செல்ல வசதியாக இருக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments