தஞ்சை அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதல் கல்லூரி மாணவிகள் உள்பட 37 பேர் காயம்




தஞ்சை அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 37 பேர் காயம் அடைந்தனர்.

தனியார் பஸ்கள்

தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சையில் இருந்து கும்பகோணத்தை நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியில் உள்ள சக்தி நகரை சேர்ந்த லோகநாதன் மகன் அருள்(வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக அரவிந்த் பணியில் இருந்தார்.

அதேபோல் கும்பகோணத்தில் இருந்து தஞ்சையை நோக்கி மற்றொரு தனியார் பஸ் வந்தது. இந்த பஸ்சை திருவையாறு அருகே ராயன்பேட்டையை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செல்வகுமார்(27) ஓட்டி வந்தார்.

நேருக்குநேர் மோதல்; 37 பேர் காயம்

இந்த 2 பஸ்களும் தஞ்சையை அடுத்த வயலூர் அருகே எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பஸ்களின் முன்பக்கமும் அப்பளம்போல் நொறுங்கியது

மேலும் அந்த பஸ்களில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவிகளான தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகள் சுஜிதா(19), தஞ்சையை அடுத்த சக்கராபள்ளியை சேர்ந்த பாண்டியன் மகள் வைஷ்ணவி(23), திருவையாறை சேர்ந்த சுந்தரம்பிள்ளை(48), பாபநாசத்தை சேர்ந்த முருகானந்தம்(49) பிரவீன் மகள் மணிமேகலை(19), பெரம்பூரை சேர்ந்த லட்சுமி(48), பசுபதிகோவிலை சேர்ந்த துரையரசன் மகன் உமாசெந்தில்(21), திருச்சியை சேர்ந்த மீனா(58), தஞ்சையை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் டயானாமேரி(21), சரஸ்வதி(37), மாரிமுத்து மகன் ஹரிஷ்(18), விஜயசாரதி(49) மற்றும் டிரைவர்கள் உள்பட 37 பேர் காயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சை தாலுகா போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments