அறந்தாங்கி அருகே நரசிங்க காவிரி ஆற்றில் தடுப்பணைகளை ரூ.4 கோடியில் புனரமைக்க அரசுக்கு கருத்துரு




அறந்தாங்கி அருகே நரசிங்க காவிரி ஆற்றில் தடுப்பணைகளை ரூ.4 கோடியில் புனரமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

நரசிங்க காவிரி ஆறு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, அக்னியாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் காணப்படுகிறது. இவை அனைத்தும் காட்டாறுகளாகும். மழை காலத்தில் மழை பெய்யும் போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மேலும் கால்வாய்கள், வரத்து வாரிகள், ஏரிகள், கண்மாயில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும் போது ஆற்றில் கலக்கிறது. இதேபோல காவிரி கடைமடை பகுதிகளான மேற்பனைக்காடு, நாகுடி பகுதிகளில் கல்லணை கால்வாய் உள்ளது. அறந்தாங்கி அருகே நற்பவளகுடியில் இருந்து நரசிங்க காவிரி ஆறு எனும் காட்டாறு செல்கிறது. கண்மாயில் உள்ள உபரிநீர் திறந்து விடப்படுவதிலும், மழை தண்ணீரும் கலந்து ஆறாக ஓடும்.

தடுப்பணைகள் சேதம்

இந்த ஆறு அறந்தாங்கியில் இருந்து பெங்காடு, நாகுடி வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் சென்று கட்டுமாவடியில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் 18 படுக்கை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் மழைக்காலங்களில் தண்ணீர் ஓடும் போது தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பருவ மழை பொய்த்ததன் காரணமாக தற்போது இந்த ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் நரசிங்க காவிரி ஆற்றில் பெருங்காட்டில் இருந்து ஏனாதி வரையில் உள்ள தடுப்பணைகளில் சில தடுப்பணைகள் சேதமடைந்தும், புதர் மண்டியும் கிடப்பதாகவும் அதில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுக்கு கருத்துரு

இதையடுத்து நரசிங்க காவிரி ஆற்றில் தடுப்பணைகளை ரூ.4 கோடியில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசுக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இதில் எவ்வளவு செலவாகும் என தோராயமாக மதிப்பிடப்பட்டு குறிப்பிட்டுள்ளோம். இந்த கருத்துரு அரசின் கவனத்திற்கு சென்றடைந்த பின், நிதிநிலைமையை பொறுத்து நிதி ஒதுக்கப்பட்ட பின் பணிகள் தொடங்கும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments