மதுரை - மேலூர் - திருப்பத்தூர் - காரைக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் MP வலியுறுத்தினார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஒரு காலத்தில் ரயில்வேக்கு என்று ஒரு பட்ஜெட் இருந்தது . நாடாளுமன்றம் அதை விவாதித்தது . நாட்டு மக்களும் அதை விவாதித்தனர். இன்று ரயில்வே பட்ஜெட் இல்லை. அரசாங்கங்கள் பட்ஜெட்டில் சில துறைகளுக்கான நிதியை ஒழித்துக்கட்டும். ஆனால் ஒரு பட்ஜெட்டையே ஒழித்துக் கட்டிய பெருமை பாஜகவையே சாரும். நான் எனக்காக மட்டும் கேட்கவில்லை. மந்திரிக்காகவும் சேர்த்துக் கேட்கிறேன். பட்ஜெட்டே இல்லை என்றால் அமைச்சர் என்ன பேசுவார் ? திட்டங்களைப் பற்றி நாட்டு மக்களிடம் என்ன சொல்ல முடியும் ? நீங்கள் யோசித்துப் பாருங்கள் 6 மணி நேரம் விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 6 நாளுக்கு ஒரு விபத்து நடந்து நாடே ரயில்வே துறையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வேதனையோடு இங்கே நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஜூலை 18 இல் துவங்கி ஜூலை 30 வரை 13 நாட்களில் 9 விபத்துகள் நடந்துள்ளது. ஆனால் பொது பட்ஜெட்டில் கவச் எந்திரம் பற்றிய ஒரு சொல் கூட இல்லை. அதை அவுட்சோர்சிங் செய்யாமல் ரயில்வே துறை S@T துறை மூலம் அதை உருவாக்கலாம். அந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. நாம் மேம்படுத்தப்பட்ட பயணத்தைப் பற்றி விவாதிக்கவில்லை என்றால் விபத்தின் கோர மரணங்களைப் பற்றி நாடு விவாதித்துக் கொண்டிருக்கும். இங்கே நாம் எதை நாம் அனுமதிக்கப் போகிறோம்.
மிகுந்த வேதனை என்னவென்றால் ரயில்வே துறையினுடைய பிங்க் புக் ஒவ்வொரு மண்டலத்திலும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது , அகலரயில் பாதைக்கு எவ்வளவு , இரட்டைப் பாதைக்கு எவ்வளவு , மின்மயமாக்கலுக்கு எவ்வளவு என்ற விபரம் பிங்க் புத்தகத்தில் தான் இருக்கும். பிங்க் புத்தகம் பொது பட்ஜெட்டுக்கு அடுத்தநாள் இதுவரை வெளியிடப்படும். ஆனால் இன்றைக்கு வரை ரயில்வே துறையின் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை. ரயில்வே துறையின் அதிகாரிகளை அழைத்துப் பேசினால் ஆகஸ்ட் 12 க்குப் பிறகுதான் நாங்கள் வெளியிடுவோம் என்று சொல்கிறார்கள். அதாவது இந்தக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு தான் பிங்க் புத்தகம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கான காரணத்தை மாண்புமிகு அமைச்சர் இந்த அவையிலே தெரிவிக்க வேண்டும். ஆவணத்தை வெளியிடாமலேயே எதைப்பற்றி விவாதிப்பது ? மிகுந்த வேதனையாக இருக்கின்றது .
எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது . பிங்க் புத்தகம் ரயில்வே வரலாற்றில் இதுவரை இத்தனை நாள் வெளியிடாமல் இருந்ததில்லை. இப்பொழுது இது ஏன் நடக்கிறது. இங்கே மூத்த உறுப்பினர் அண்ணன் செல்வகணபதி அவர்கள் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களைப் பற்றி பேசினார். தமிழ்நாட்டின் 10 ரயில்வே திட்டங்களுக்கு, புதிய ரயில்வே வழித்தடத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக தலா 1000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த அவையிலே நாங்கள் கவனப்படுத்தி இருக்கிறோம். கடந்த ஆண்டு 100 கோடி ஒதுக்கப்பட்டது . ஆனால் பாதுகாப்பு நிதியில் இருந்து அது ஒதுக்கப்பட்டது என்று கூறி அதைத் திரும்பப் பெற்றுவிட்டனர். இந்த ஆண்டு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை ஏற்கெனவே பொது பட்ஜெட்டிலே தமிழ்நாட்டிற்கு செய்த அநீதி , ரயில்வேயிலும் செய்யப்பட்டிருக்குமோ என்ற அச்சம் வருகிறது. உங்கள் அச்சம் பொய்யானது என அமைச்சர் சொன்னால் எங்களுக்கு மகிழ்ச்சி . தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை நீங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் இங்கே கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே ஆச்சரியம் என்னவென்றால் இந்த அவையிலே தாக்கல் செய்ய வேண்டிய புத்தகம் தாக்கல் செய்யப்படவில்லை . ஆனால் தேர்வு அறையிலே தாக்கல் செய்ய வேண்டிய வினாத்தாள்கள் 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியாகிறது. விசித்திரமான ஒரு அரசாக இந்த அரசு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அவையில் உங்கள் மூலமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான மண்டலம் , மதுரை மண்டலம் . மதுரையினுடைய போக்குவரத்து நெரிசல் உங்கள் எல்லோருக்கும் தெரியும். மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் . திருவனந்தபுரத்திற்கு பேட்டை ரயில்நிலையம் இருப்பதைப் போல , சென்னைக்கு எழும்பூர் , செண்ட்ரல் இருக்கிறது . தாம்பரம் , ராயபுரம் புதிய முனையங்களாக விரிவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல மதுரை கூடல்நகர் முனையத்தை புதுமுனையமாக அறிவிக்க வேண்டுமென்று மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அங்கே போதுமான நிலம் முழுமையாக இருக்கிறது. அதேபோல தூத்துக்குடி துறைமுகம் , மற்றும்
சிமெண்ட் ஆலைகளால் சரக்கு வண்டிகளால் மதுரை ரயில் முனையத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது . அதற்காக ஒரு புதிய வழித்தடம் உருவாக்கப்பட வேண்டும். சோழவந்தான் , செக்கானூரணி வழியாக சிவரக்கோட்டை செல்கிற ஒரு புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டால் 27 கிமீ மிச்சமாகும் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் .
அதேபோல மிக முக்கியமாக உறுப்பினர்கள் குறிப்பிட்டதைப் போல மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி வழித்தட சர்வே முடிந்து விட்டது. அதற்கு நிதி ஒதுக்க வேண்டும். மாண்புமிகு அமைச்சரை நான் மிகப் பணிவோடு கேட்டுக் கொள்வது மதுரை மேலூர் திருப்பத்தூர் காரைக்குடி புதிய வழித்தடம் பல ஆண்டுகளாக சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு குறைந்த பட்சத் தொகையாவது நீங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரயில்வே அமைச்சருக்கு ஒரு பட்ஜெட்டே வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு ஒரு குறைந்தபட்சத் தொகையாவது நீங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை நான் இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல மூத்தோர்களுக்கான பயணச் சலுகை , அது கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. 6 கோடி முதியோர்கள் முன்பதிவு செய்தும் , 6 கோடி முதியோர்கள் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்தனர். அவற்றை நிறுத்தியதால் எங்களுக்கு 1667 கோடி ரூபாய் மிச்சம் என்று அர்சு சொல்கிறது. தனது வீட்டிலே இருக்கிற பெற்றோருக்கு 3 வேளைக்கு பதில் 2 வேளை சாப்பாடு கொடுத்ததால் என்னுடைய வீட்டின் பட்ஜெட் 5000 ரூபாய் மிச்சமாகிவிட்டது என்று ஒரு மகன் சொன்னால் அந்த மகனுக்கு ஊரிலே இருக்கிற பெயரை நான் இந்த அவையிலே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
எனவே மிக முக்கியமாக திண்டுக்கல் முதல் சபரிமலை வரையிலான புதிய வழித்தடத்தையும் நீங்கள் உருவாக்க வேண்டும். இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன் இந்த அவையிலே நான் தமிழிலே பேசுகிறேன். நீங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கேட்கிறீர்கள் . இதே போல பயணச்சீட்டு வாங்குகிற ஒவ்வொரு பயணியும் மொழிபெயர்ப்பாளரோடு போய் பயணச்சீட்டு மையத்தில் நிற்க முடியாது. காரணம் அவ்வளவு பயணச்சீட்டு மையத்திலும் இந்தி தெரிந்தவர்கள் தமிழ்மொழி தெரியாதவர்கள் இன்றைக்கு ரயில்வேயிலே இருக்கிறார்கள். எனவே மண்டல அளவிலான பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் உறுதி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இந்தியாவிலேயே அதிக நகர்மயமாகிற மாநிலம் தமிழ்நாடு . சென்னை , கோவை , திருச்சி , மதுரை , ஓசூர் , தூத்துக்குடி, சேலம், ஈரோடு என்று பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் இருக்கிறது. எனவே உள்கட்டமைப்பு மிக முக்கியமானது. அதில் இரயில்வேயின் பங்கு மிக முக்கியமானது. எனவே நீங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடாது, உரிய நிதி ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இரயில்வே துறைக்கான வரவுசெலவு அறிக்கையின் மீது எனது உரை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.