செங்கீரையின் சில பகுதிகளை ராயவரத்துடன் இணைத்ததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது




செங்கீரையில் உள்ள சில பகுதிகளை ராயவரத்துடன் இணைத்ததை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு போராட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் செங்கீரை ஊராட்சியில் 1,300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 1995-ம் ஆண்டு செங்கீரை ஊராட்சியில் இருந்து சில பகுதிகளை பிரித்து ஆயிங்குடி, ராயவரம் ஆகிய ஊராட்சிகளோடு இணைத்து அன்றைய மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை. சுமார் 28 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செங்கீரை ஊராட்சியில் வரி இனங்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்களை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 19.12.23 அன்று முன்பு பிரித்த ஊராட்சி எல்கையை செயல்படுத்த அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

200 பேர் கைது

இதனையடுத்து நேற்று செங்கீரை ஊராட்சியில் உள்ள சில பகுதிகளை ராயவரம் ஊராட்சியுடன் இணைத்ததை கண்டித்து செங்கீரை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சென்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முற்றுகை இடச்சென்ற பொதுமக்களை போலீசார் வழிமறித்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments