அன்னவாசல் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் 6 மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை கலெக்டர் அருணா நேரில் ஆய்வு




அன்னவாசல் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் 6 மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருணா நேரில் ஆய்வு செய்தார்.

மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் ரஞ்சனி, ரித்திகா, கார்த்திகா, அனுஷ்கா, லத்திகா ஆகிய 5 மாணவிகள் மற்றும் பரம்பூரில் 6-ம் வகுப்பு படிக்கும் தன்சினிஸ்ரீ என்ற மாணவி உள்ளிட்ட 6 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதனைதொடர்ந்து மேட்டுப்பட்டியில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். ஊராட்சி சார்பில் அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டர் அருணா மேட்டுப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் வரவழைத்து முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கும் தண்ணீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அந்த கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கினாலும், அப்பகுதி மக்கள் அங்கு பள்ளியின் பின்பக்கம் உள்ள குளத்தில் இருந்தே தண்ணீர் எடுத்து சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர். பள்ளியிலும் அதே தண்ணீர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் அந்த தண்ணீரை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

அங்கன்வாடியில்...

இதனிடையே பொதுமக்கள், தண்ணீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் வரும் நீரில் சமைத்தால் சோற்றின் நிறம் மாறிவிடுவதால், வழக்கமாக குளத்தில் இருந்து நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்ததாக கூறினர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலோகம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்த 15 பள்ளி மாணவ-மாணவிகள் 15 பேர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கலெக்டர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து காலாவதியான உணவு பொருட்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார். ஆய்வின் போது தாசில்தார் சூரியபிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments