கோட்டைப்பட்டினம் தர்காவில் கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு




கோட்டைப்பட்டினம் தர்காவில் கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

கந்தூரி விழா

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித்தளம் அருகே அமைந்துள்ளது ராவுத்தர் அப்பா தர்கா. இந்த தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தினந்தோறும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ரதம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் இரவு தர்காவில் குர்ஆன் ஓதப்பட்டு நார்ஷா வழங்கப்பட்டது.

சந்தனக்கூடு ஊர்வலம்

விழாவில் 10-வது நாளான நேற்று முன்தினம் கந்தூரி விழா நடைபெற்றது. கந்தூரி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் தர்கா அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கூட்டுக்கொட்டகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தாரை, தப்பட்டை வாணவேடிக்கைகளுடன் புறப்பட்டது.

இந்த ஊர்வலம் முக்கியவீதி வழியாக சென்று தர்காவை வந்தடைந்தது. பின்னர் ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்படு சந்தனம் பூசப்பட்டது. இந்த கந்தூரி விழாவிற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல மதத்தவர்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கந்தூரி விழாவையொட்டி 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுப்படிருந்தனர். விழாக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜமாத்தார்களும், கந்தூரி கமிட்டியாளர்களும் செய்திருந்தனர்.

மதநல்லிணக்க விழா

இந்த கந்தூரி விழா மதநல்லிணக்க விழாவாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கந்தூரி விழாவிற்கு முதல் நாள் மண்டகப்படியை பத்தர் குடும்பத்தினர் காலங்காலமாக செய்து வருகின்றனர். மேலும் தர்காவை பராமரித்தல், சந்தனக்கூட்டிற்கு முன்பு தீப்பந்தம் ஏந்தி செல்லுதல், சந்தனக்கூட்டை வடம்பிடித்து இழுத்தல் ஆகியவை அனைத்தையும் கோட்டைப்பட்டினத்தை சுற்றியுள்ள நட்பு கிராமமான கொடிக்குளம், இரளிவயல் பகுதியை சேர்ந்த பிறமதத்தவர்கள் தான் காலங்காலமாக செய்து வருகின்றனர்.

இதேபோல ராவுத்தர் அப்பாவும், முனியய்யாவும் உற்ற தோழராக இருந்துள்ளனர். இதனால் ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலம் அருகேயே முனியய்யா கோவிலும் அமைந்துள்ளது. தர்கா எவ்வாறு வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ அதே போல் முனியய்யா கோவிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெறும்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments