தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,313 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன சம்பா நெல் சாகுபடிக்கு இருப்பு வைப்பு




தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,313 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன. சம்பா நெல் சாகுபடிக்கு இருப்பு வைக்கப்பட்டன.

சம்பா நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 5,071 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,002 மெட்ரிக் டன், பொட்டாஷ் 815 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,021 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 773 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

1,313 மெட்ரிக் டன் உர மூட்டைகள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான உர வினியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயிலில் புதுக்கோட்டைக்கு நேற்று உர மூட்டைகள் வந்தன.

மொத்தம் 21 வேகன்களில் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் என மொத்தம் 1,313 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தது. இதில் 1047 மெட்ரிக் டன் உரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையிலும் அந்தந்த குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள உர மூட்டைகள் சிவகங்கை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கடும் நடவடிக்கை

உரமூட்டைகளை சரக்கு ரெயிலில் வேகன்களில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் முகமது ரபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும், மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும் படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உர விற்பனையாளர்கள் விதிமீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments