அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பரபரப்பு: பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்ற பட்டதாரி வாலிபர் சாவு உறவினர்கள் சாலை மறியல்





அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்ற பட்டதாரி வாலிபர் இறந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பட்டதாரி வாலிபர்

அறந்தாங்கி அருகே பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் குளமங்கலத்தில் உள்ள ஏலக்கடையில் கமிஷன் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அஜித் குமார் (வயது 24). பட்டதாரி வாலிபரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அஜித் குமாரின் கழுத்துப்பகுதியில் பாம்பு கடித்து உள்ளது.

இதையடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்களும் அங்கு வந்துவிட்டனர்.

சாலை மறியல்

அதிகாலை நேரத்தில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் அவருக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பணிக்கு வந்த டாக்டர்கள் அஜித் குமாருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜித் குமார் பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் இரவு நேரத்தில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் அஜித் குமார் இறந்து விட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான வாலிபரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார், அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments