இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த 3 இலங்கை மீனவர்கள் சிக்கினர் புழல் சிறையில் அடைப்பு






ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் ரோந்து சென்றது. இதற்கிைடயே பாக்ஜலசந்திகடல் பகுதியான மண்டபத்திற்கும்-தொண்டிக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் சென்றபோது, அங்கு சந்தேகப்படும்படியாக பிளாஸ்டிக் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அந்த படகை சோதனை செய்தனர். அப்போது அந்த படகு இலங்கையை சேர்ந்த படகு என்பதும், அதில் இருந்த 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் தாலையடி பகுதியை சேர்ந்த பாலரமேஷ்(வயது 37), புலேகுமார்(44), நிரோஷன்(34) என்றும், இந்த 3 பேரும் கடந்த 14-ந் தேதி மீன்பிடிக்க புறப்பட்டதாகவும், படகு பழுதானதால் கடல் நீரோட்டம் காரணமாக இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்ததாகவும் தெரியவந்தது. 3 பேரும் மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர். இதை தொடர்ந்து பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கடலோர போலீசார், அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments