மாவட்டத்தில் 1½ லட்சம் பனை விதைகள் நடும் பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 1½ லட்சம் பனை விதைகள் நடும் பணி தொடக்க நிகழ்ச்சி கவிநாடு கண்மாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பனைவிதைகள் நட்டு பணியை தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 148 இடங்களில் குப்பை கிடங்குகள் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மற்ற இடங்களிலும் பயோ மைனிங் முறையில் பணிகள் முடிவடையும். தமிழகத்தை பசுமையாக மாற்ற 23 சதவீத வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். அமைச்சர் ரகுபதி கூறுகையில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக மதசார்பின்மை குறித்து தமிழக கவர்னர் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை முழுமையாக முடிவடைந்து குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியும் பட்சத்தில் அவர்கள் மீதும் வழக்கு போடப்படும்'' என்றார்.

ஆலங்குடி அருகே வம்பன் அற்புதா கல்லூரி எதிரில் ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் பெண்கள் சாலையோரம் உள்ள பனை மரங்களில் இருந்து பனம் பழம் கொட்டி கிடப்பதை எடுத்து குவியலாக வைத்திருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் மெய்யநாதன் காரில் இருந்து இறங்கி அவர்களிடம் கேட்டறிந்தார். மாஞ்சன் விடுதி ஊராட்சி சார்பில் பனை விதை நடுவதற்காக பனம் பழம் விதை பொறுக்குவதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களை பாராட்டி அங்கிருந்து சென்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments