புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் அரசு விரைவு பஸ் சேவை பயணிகளிடம் வரவேற்பு




புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் அரசு விரைவு பஸ் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அரசு விரைவு பஸ்

புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரிடையாக அரசு விரைவு பஸ்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதற்கு முன்பு இயக்கப்பட்ட பஸ்களும் பிற ஊர்களில் இருந்து இயக்கப்பட்டன. இதேபோல் ஏம்பல், அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் வந்து சென்னை செல்லும். இதில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.

டிக்கெட் கட்டணம் விவரம்

இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நேரிடையாக சென்னைக்கு பஸ் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றியது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் படுக்கை வசதியுடன் கூடிய விரைவு பஸ் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. தினமும் இரவு 9 மணியளவில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு காலை 5 மணியளவில் சென்றடையும்.

இந்த பஸ்சில் படுக்கை வசதி மற்றும் அமர்ந்து செல்லும் வகையில் மொத்தம் 42 இருக்கைகள் உள்ளன. படுக்கை வசதி டிக்கெட் கட்டணம் ரூ.570-ம், இருக்கை வசதி கட்டணம் ரூ.370 ஆகும். டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள முடியும். பயணிகள் தங்கள் பயண தேதிக்கு ஏற்ப டிக்கெட்டுகளை தற்போது முன்பதிவு செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேரடியாக இயக்கப்படும் இந்த விரைவு பஸ் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments