புயல் கரையை கடந்த நிலையில் பாம்பன் குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து தொடக்கம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி




புயல் கரையை கடந்த நிலையில் பாம்பன் குருசடை தீவு பகுதிகளில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெஞ்ஜல் புயல்

வங்கக் கடலில் உருவான பெஞ்ஜல் புயல் சின்னத்தை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு வனத்துறை சார்பில் இயக்கப்பட்ட படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல மண்டபம் காந்திநகர், ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசை கடற்கரை, தொண்டி, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெஞ்ஜல் புயல் சின்னம் புதுச்சேரி அருகே கரையை கடந்து வலுவிழந்தது. புயல் சின்னம் கரையை கடந்த நிலையில் ராமேசுவரம் பகுதி கடந்த 3 நாட்களுக்கு பின்னர் கடல் சீற்றம் இன்றி இயல்பு நிலைக்கு திரும்பியது.

படகு போக்குவரத்து தொடக்கம்

இந்த நிலையில் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவிற்கு வழக்கம்போல் வனத்துறை சார்பில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு குருசடை தீவுக்கு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று பாம்பன் வந்த சுற்றுலா பயணிகள் குந்துகால் கடற்கரையில் இருந்து வனத்துறை படகில் பயணம் செய்தபடி கடல் மற்றும் கடற்கரை தீவின் அழகையும் பார்த்து ரசித்தனர்.

இதேபோல் மண்டபம் காந்திநகர் பகுதி ஏர்வாடி பிச்சை மூப்பன்வலசை கடற்கரை, தொண்டி, காரங்காடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் படகு போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments