மணமேல்குடி அருகே மழைநீர் கடலில் கலக்கும் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த இறால் பண்ணைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை




மணமேல்குடி அருகே மழைநீர் கடலில் கலக்கும் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த இறால் பண்ணைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கடற்கரை பகுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வியாழன் முதல் நேற்று முன்தினம் வரை பரவலாக மழை பெய்தது. இதில் கடற்கரை பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மணமேல்குடி பகுதியில் கடற்கரையையொட்டியுள்ள மீனவ கிராமங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கின. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்த நிலையில் மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினத்தில் இருந்து கடலில் மழை தண்ணீர் கலக்கக்கூடிய நீர்வழி ஓடை பாதையில் தனியார் மூலம் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தண்ணீர் வழிந்தோடாமல் ஊருக்குள் புகுந்து தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் அருணா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இறால் பண்ணைகள் அகற்றம்

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர் உள்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நீர்வழிபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 5 தனியார் இறால் பண்ணைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். பண்ணையில் இறால் வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த குட்டைகள்அகற்றப்பட்ட பின் மழைநீர் வழிந்தோடி கடலில் கலந்தது.

அதன்பின் ஊருக்குள் தேங்கிய மழைநீர் வடிந்தது. தனியார் இறால் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின்சார இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர். மேலும் இனி ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆக்கிரமிப்பில் இருந்த இறால் பண்ணைகள் அகற்றப்படுவதை அறிந்த தனியார் நிறுவனத்தினர் உடனடியாக அதில் இருந்த இறால்களை பிடித்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments