புதுக்கோட்டை அருகே குளத்தில் கொக்கு வேட்டை; சிறுவன் உள்பட 3 பேர் கைது




புதுக்கோட்டை அருகே குளத்தில் கொக்கு வேட்டையாடிய சிறுவன் உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வன உயிரினங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் வன உயிரினங்களை வேட்டையாடும் நபர்கள் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி வனப்பகுதியில் முயல், மான், உடும்பு, எறும்புதிண்ணி, கொக்கு உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக யாரேனும் வேட்டையாடுகின்றனரா? என கண்காணித்து வந்தனர். மேலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலுப்பூர் அருகே கழுஞ்சி குளத்தில் சம்பவத்தன்று இரவு ஒரு கும்பல் பறவையினங்களை வேட்டையாடுவதாக தகவல் கிடைத்தது.

3 பேர் கைது

இதையடுத்து புதுக்கோட்டை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு குளத்தில் கொக்குகளை வேட்டையாடிக்கொண்டிருந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவன் ஒருவன் மற்றும் 18 வயதுடைய 2 பேர் என மொத்தம் 3 பேர் சிக்கினர். அவர்கள் கவுட்டை, கம்பு, கன்னி மூலம் கொக்குகளை வேட்டையாடியது தெரியவந்தது. மேலும் அவர்கள் 12 கொக்குகளை வேட்டையாடி வைத்திருந்தனர். இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 12 கொக்குகளை மண்ணில் புதைத்து அழித்தனர். கைதான 3 பேரையும் சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

எச்சரிக்கை

வன உயிரினங்களை வேட்டையாடுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். வன உயிரினங்களை வேட்டையாடினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments