மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள்




மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாளாகும்.

போட்டி தேர்வுக்கு பயிற்சி

மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் இணைந்து மேற்கொள்கிறது.

ஆண்டுதோறும் 20 மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.

25-ந் தேதி கடைசி நாள்

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலோ விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments