மணமேல்குடி அருகே சோகம்: நாட்டுப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு



மணமேல்குடியில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ராஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோணி சேவியர் (வயது 45), பாஸ்கர் (44). இவர்கள் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலில் 8 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு திடீரென பழுதாகி நின்றது.

இதையடுத்து அந்தோணி சேவியர் படகினை பழுதுபார்க்க படகின் ஓரத்திற்கு சென்றபோது நிலைதடுமாறி கடலில் விழுந்து மூழ்கினார். இவரை காப்பாற்ற முயன்ற பாஸ்கரும் கடலில் விழுந்து தத்தளித்தார்.

அப்போது அந்த வழியே மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் பாஸ்கரை காப்பாற்றி படகில் ஏற்றினர். பின்னர் அவர்கள் கடலில் மூழ்கிய அந்தோணி சேவியரையும் தேடி பார்த்தனர். அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.

பின்னர் இதுகுறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே பாஸ்கரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசாருடன் கடலுக்கு சென்று அந்தோணி சேவியரை தேடி பார்த்தனர். இதற்கிடையில் கடலில் மூழ்கிய அந்தோணி சேவியர் உடல் புதுக்குடி கடற்கரையோரம் மிதந்துள்ளது.

இதையடுத்து அந்தோணி சேவியர் உடலை போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் அந்தோணி சேவியர் உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமேல்குடியில், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது நாட்டுப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments