மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம் கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை




மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகினர். கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுப்படகில்...

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், இவரும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), விநாயகம் (30) மணி (35) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரைக்கு திரும்ப தொடங்கினர். இதில் மூர்த்தி படகில் சென்ற 4 பேரும் படகுடன் நேற்று மாலை வரையும் கரைக்கு திரும்பவில்லை.

மீனவர்கள் மாயம்

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவ குடும்பத்தினர் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரும், சக மீனவர்களும் படகின் மூலம் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டு போலீசார் மற்றும் சக மீனவர்கள் கரைக்கு திரும்பினர். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் மீனவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டை

மீன்வளத்துறையினர் கடலில் காற்றின் வேகம் காரணமாக நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என கூறியும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் பக்கத்து மாவட்டங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்து மாயமான மீனவர்களை அவர்களும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments