ராமேசுவரத்தில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்த திட்டம்: புதுக்கோட்டையில் ரூ.9½ கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் 4 பேர் கைது




ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக புதுக்கோட்டையில் வைத்திருந்த ரூ.9½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

போதை மாத்திரைகள்

புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ள மீன்மார்க்கெட்டிற்கு பின்புறம் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு பிருந்தா வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படையுடன் சேர்ந்து அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகில் 7 அட்டை பெட்டிகள் இருந்தன. இதைக்கண்ட போலீசார், அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் அருகில் இருந்த அட்டை பெட்டிகளை சோதனை செய்தனர். இதில் அனைத்து பெட்டிகளிலும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இலங்கைக்கு கடத்த திட்டம்

இது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அந்த பெட்டிகளில் ப்ரீகாபலின் என்ற 4 லட்சத்து 82 ஆயிரம் போதை மாத்திரைகளும், டானிடோல் 100 என்ற 60 மாத்திரைகளும் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.9 கோடியே 64 லட்சத்து 126 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 4 பேரையும் டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 33), அமல்ராஜ் (37), பிரதாப் (35), சந்தியா (36) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ராமேசுவரத்தில் உள்ள படகுகள் மூலம் போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

முதல் முறையாக...

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா கூறுகையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரை கடத்திய கும்பலை கைது செய்துள்ளோம். இவர்கள் 7 பெட்டிகளில் போதை மாத்திரைகளை வைத்துக்கொண்டு, அவற்றை கடத்த ஒரு வாரமாக வாகனம் வருவதற்காக காத்திருந்தனர். அப்போது போலீசாரின் பிடியில் சிக்கினர். மேலும் இந்த போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். கடலோர பகுதிகளில் கடந்த ஆண்டு 100 கிலோ கஞ்சா, கோட்டைப்பட்டினத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 2 வகையான போதை மாத்திரைகளை முதல் முறையாக பறிமுதல் செய்துள்ளோம். இந்த போதை மாத்திரைகளை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை மேற்கொண்டு, அவற்றில் எந்த மாதிரியான போதை பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்படும், என்றார்.





 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments