தேர்தல் புறக்கணிப்பு பேனாரால் பரபரப்பு: கோபாலப்பட்டிணத்தில் அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் அதிருப்தி




கோபாலப்பட்டிணம் பகுதியில் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அரசு மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து, வரும் தேர்தலைப் புறக்கணிப்பதாக கோபாலப்பட்டிணம் கிராம மக்கள் அதிரடி முடிவெடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்,  நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பாகப் பல்வேறு வடிவங்களில் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இருப்பினும், அதிகாரிகளின் தரப்பிலிருந்து எவ்வித ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் ஏற்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பு அவமதிப்பு
குறிப்பாக, இப்பகுதியில் குப்பைக் கிடங்கு அமைப்பது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அதிகாரிகள் மதிக்கவில்லை என்றும், தொடர்ந்து கால நீட்டிப்பு செய்து வருவதாகவும் கிராமத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதமான 'வாக்களிப்பதை'ப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ஜும்மா தொழுகைக்குப் பின் முடிவு
கடந்த 03-04-2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில், பொதுமக்களின் முழு ஒப்புதலோடு இந்தத் "தேர்தல் புறக்கணிப்பு" தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூக வலைதளங்களில் வைரல்
இந்த முடிவின் அடிப்படையில், "தேர்தல் புறக்கணிப்பு" என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகள் (பேனர்கள்) தயார் செய்யப்பட்டு, இன்று 08/04/2026 சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டன. இது மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதில் கோபாலப்பட்டிணம் கிராம மக்கள் உறுதியாக உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments