கோபாலப்பட்டிணத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தேர்தல் புறக்கணிப்பு முடிவு: அரசு அதிகாரிகளுடன் சமரசம் ஏற்பட்டதால் தற்காலிகமாக வாபஸ்!




கோபாலப்பட்டிணம் கிராமத்தின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நடைபெறவுள்ள தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருந்த கோபாலப்பட்டிணம் கிராம மக்கள், அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அந்த முடிவை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் கிராமத்தில் நிலவும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள், சாலை மறியல் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், அரசு அதிகாரிகள் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அதிகாரிகள் மதிக்கவில்லை என்பதும் மக்களின் முக்கிய புகாராக உள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டிக்கும் விதமாக, ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதமான "வாக்கு செலுத்துவதை புறக்கணிப்பது" என்று கடந்த 03-04-2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற ஜமாஅத் நிர்வாக சபை மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

சமரச பேச்சுவார்த்தை
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று 09-04-2026 (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் அரசு அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஜமாஅத் மற்றும் பொதுமக்களுக்கு உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நீடித்தது.

தற்காலிகமாக வாபஸ்
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மக்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் தரப்பில் ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டது. அதிகாரிகளின் இந்த உறுதிமொழியை ஏற்று, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் தொடரும் என கிராம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments