மணமேல்குடி அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் அரிவாள் வெட்டு; சிகிச்சை பலனின்றி மீனவர் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை




மணமேல்குடி அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் கொடுக்கல்-வாங்கல்

மணமேல்குடியை அடுத்த பொன்னகரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் காளீஸ்வரன் (வயது 45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மீனவர் சீதாராமன் (44) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சீதாராமன் தனது உறவினரான கலியபெருமாளுடன் (40) சென்று காளீஸ்வரனிடம் சம்பவத்தன்று காலை பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அரிவாள் வெட்டு

இதில், ஆத்திரமடைந்த காளீஸ்வரன் தனது தம்பி கவுதம் (40), உறவினர்களான சாந்தி (32), காவியா (35), லோகேஸ்வரி (37), நாச்சியார் (64) ஆகிய 6 பேருடன் சேர்ந்து சீதாராமன், கலியபெருமாள் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சீதாராமன், கலியபெருமாளை அப்பகுதி மக்கள் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து, மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரன், கவுதம், சாந்தி, காவியா, லோகேஸ்வரி, நாச்சியார் ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீனவர் சாவு

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனவர் சீதாராமன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments