ஆவுடையார்கோவில் மண்டல குறுவட்ட வளையப்பந்து போட்டி: மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் மண்டல அளவிலான, குறுவட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வளையப்பந்து (Ring Ball) விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை நடத்திய இந்த விளையாட்டு விழாவின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் அனைத்தும், மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தப்பட்டன.

​இப்போட்டியில் இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி, கரூர் அரசு உயர்நிலைப்பள்ளி, காரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி ஜெகதீஸ்வரர் மேல்நிலைப்பள்ளி, அம்மாபட்டினம் கிரசண்ட் பள்ளி மற்றும் கோட்டைப்பட்டினம் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களின் விறுவிறுப்பான ஆட்டத்தை அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் நேரில் கண்டு ரசித்து உற்சாகப்படுத்தினர்.
முன்னதாக, இந்த விளையாட்டுப் போட்டியை மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராமசாமி அவர்கள் முறைப்படி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் பாக்கியராஜ், பிரபு, செந்தில், மணிமாறன், மலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு போட்டிகளைச் சிறப்புடன் ஒருங்கிணைத்தனர்.

​போட்டிகளின் முடிவில், மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், இதில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள புதுக்கோட்டை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கித் தேர்வு செய்யப்பட்டனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments