ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?



ஏ. டி. எம். என்று சொல்லப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரகளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் இருப்பதில்லை. அரைகுறையாய், ஏதோ தெரிந்ததை செய்து அவதிப்படுபவர்கள் தான் அதிகம்.  சின்ன சின்ன நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் சிக்கல் இல்லாமல் ஏடி.எம். இயந்திரத்தை பயன்படுத்தலாம்.


பணம் வழங்கும் இயந்திரங்கள் பலவகைப்பட்டவை. சிலவற்றில் அடையாள அட்டையை அதற்குரிய துளையில் சொருகி, உடனே வெளியில் எடுத்து விட வேண்டும்.  வேறு சில இயந்திரங்கள் அட்டையை உள்ளே இழுத்துக்கொண்டு ஒரு சில நொடிகள் கழித்தே வெளியே தள்ளும்.

அடையாள அட்டையின் ஓரத்தில் கருப்பு நிறப்பட்டை ஒன்று இருக்கும். அட்டையின் மேல்,கீழ் பக்கங்களை எப்படி வைத்துக் கொண்டு இயந்திரத்திற்குள் கொடுக்க வேணும் என்பதற்கு ஓர் அம்புக்குறி அடையாளம்
இருக்கும். அதைக் கவனித்து அதன்படி செருக வேண்டும்.

நீங்கள் வைத்திருக்கும் கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.  பெரும்பாலும் சேமிப்புக் கணக்கிற்கான அட்டையைதான் அதிகம் வைத்திருப்பார்கள்.  சிலர் நடப்புக் கணக்கிற்கான அட்டையை வைத்திருக்கலாம்.  பணம் வழங்கும் இயந்திரம் உங்களுடைய கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்று கேட்கும்.  குறிப்பிட்ட கணக்கிற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.  இயந்திரத்தின் முன் பக்கவாட்டில் நின்று கொண்டு இயக்குபவர்களுக்குப் பார்வைக் கோணம் வேறுபாடும். சேமிப்புக்கணக்கு என்பதற்குப் பதில் நடப்புக்கணக்கு என்பதற்குரிய பொத்தானை அழுத்திவிடுவார்கள்.  இயந்திரம் பணத்தை அளிக்காது.

சில நேரங்களில், இயந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மொத்தமும் கொடுக்கப்பட்டுத் தீர்ந்து போயிருக்கலாம்.  அம்மாதிரியான வேளைகளில் இயந்திரத்தில் சிறிய சிவப்புப் பட்டை ஒன்றில் விளக்கு எரியும். இதைக் கவனிக்காமல் தொடர்ந்து பணம் எடுப்பதற்கு முயற்சிக்கக்கூடாது.

மேலும்இ எந்த வகை நாணயத்தாள்கள் இயந்திரத்தின் உள்ளே வைக்கப்பட்டு இருக்கின்றனவோ அவற்றை மட்டும்தான் இயந்திரத்தால் வழங்க முடியும்.

இயந்திரத்திற்குள் ஐம்பது ரூபாய்த் தாள்களே வைக்கப்படாமல் இருக்கு.  பணம்
எடுக்க விரும்புகிறவர், இயந்திரத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடு என்று
கேட்டால் அது எப்படிக் கொடுக்கும்?

இதேபோல் பெரிய தொகைக்கான தாள்களும் தீர்ந்து போய் இருக்கலாம்.  நமக்கு ஆயிரம் ரூபாய்த் தாள்கள் தான் வேண்டும்.  இந்த இயந்திரம் ஐந்நூறு ரூபாய் தாள்களைதானே கொடுகிறது என்று குறைபட்டுக் கொள்ளக்கூடாது.

இயந்திரத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, அடையாள அட்டையை எடுத்துக் கொண்டோமோ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எடுக்கப்பட்ட பணத்தை அம்மையத்தில் உள்ள காமிராவின் முன் நின்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.  பின்னாளில் எடுக்கப்பட்ட பணத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் காமிராவில் பதிந்திருக்கும் காட்சிகள் நம் தரப்பு நியாயங்களை சொல்ல உதவும்.

பணம் எடுக்கும் அறைக்குள் வேறு யாரும் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உள்ளே நுழைய முயற்சிக்க வேண்டாம்.

நீங்கள் உள்ளே இருக்கும்போது உங்களுக்கு பின்னால் வேறு யாரேனும் நின்று
கொண்டிருக்கக்கூடும்.  எச்சரிக்கையாக திரும்பிப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே இயங்குங்கள்.

- நன்றி தினதந்தி தொழில் மலர்.

Post a Comment

0 Comments