புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்: இதுவரை 21 வழக்குகள் பதிவு



மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கரூர் ஆகிய 4 மக்களவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தனித் தொகுதி இல்லாவிட்டாலும் வாக்குகளை சேகரிக்கும் வகையில் முறைகேடுகள் நடைபெறலாம் என்ற அடிப்படையில் வழக்கமான தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் அமலில் உள்ளன.

தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் (ஷிப்ட் அடிப்படையில்) வீதம் மொத்தம் 36 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை வரை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றதாக 5 வழக்குகளும், அனுமதியின்றி சுவர் விளம்பரம், சுவரொட்டி ஒட்டுதல், கொடிக் கம்பங்களை அகற்றாமல் இருத்தல் உள்ளிட்ட 16 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தலா இரு வழக்குகள் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் மீதும் ஒரு வழக்கு அமமுகவினர் மீதும் போடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments