அறந்தாங்கியில் கொடூரம்! ஒன்றரை வயது குழந்தைக்கு மது கொடுத்த பெண்!



அறந்தாங்கியில் ஒன்றரை வயது குழந்தைக்கு மது  கொடுத்த பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி நடாயி(42). இவர் நேற்று காலை அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் நின்று கொண்டு மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் தான் வைத்திருந்த ஒன்றரை வயது கைக்குழந்தைக்கும் மதுவை புகட்டியுள்ளார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் நடாயியையும், குழந்தையையும் மீட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை சைல்டு லைன் திட்ட இயக்குனர் லில்லிக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் பணியாளர்கள் ரஞ்சிதா, முருகேஸ்வரி ஆகியோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து, மது போதையில் இருந்த நடாயியையும், ஒன்றரை வயது குழந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர். அறந்தாங்கியில் ஒன்றரை வயது குழந்தைகளுக்கு தாயே மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழகத்தில் தற்போது மதுபானம் பெட்டிக்கடைகளில் கூட சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தால்கூட அவர்களும் கண்டுகொள்வதில்லை. மேலும் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மதுவிற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. 24 மணி நேரமும் மதுபானம் தடையின்றி கிடைப்பதால், இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்த நிலையில் போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு பதிலாக மது புகட்டியது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன்மூலம் மதுவின் தீமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. குழந்தைக்கு பாலுக்கு பதிலாக மது புகட்டிய தாய் நடாயு குழந்தையுடன் சென்று பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறார். 

பிச்சை எடுக்கும் வருமானத்தில் மதுவுக்கு அவர் அடிமையானார். பிச்சை எடுக்க செல்லும் இடத்தில் மது அருந்தும் நடாயு, தான் போதையில் மயங்கிவிட்டால், ஒன்றரை வயது குழந்தை எங்காவது சென்றுவிடும் என்பதால், அந்த பிஞ்சு குழந்தைக்கும் மது கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்திவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்  அவர் மது கொடுத்து அறந்தாங்கியில் சிக்கிக் கொண்டார்.

Post a Comment

0 Comments