அறந்தாங்கி வர்த்தக சங்கம் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு



அறந்தாங்கி நகராட்சி விதித்துள்ள 100 சதவீத சொத்துவரி உயர்வைக் கண்டித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

அறந்தாங்கி வர்த்தக சங்க சிறப்புக் கூட்டம்  வர்த்தக சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு தலைவர் பா. வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி வரி உயர்வு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகுவது, வர்த்தகர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 100 சதவீத சொத்துவரி உயர்வைக்  குறைக்க வேண்டும் என்பதற்கு வலுசேர்க்கும் வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது, இதுகுறித்து நகரில் உள்ள அனைத்து பொது நல அமைப்புகளிடமும் ஆதரவு திரட்டுவது,   கூடுதல் காவலர்களைப் பணி அமர்த்தி நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்ட புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. 

வர்த்தக சங்க நிர்வாகிகள் எம். நாகராஜன், எஸ். அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலர் வி.ஜி. செந்தில்குமார் வரவேற்றார். பொருளாளர் எஸ். சலீம் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments