எச்சரிக்கை! "வெளிநாட்டில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் பொருள்களை விமானத்தில் கொண்டுவர வேண்டாம்''



வெளிநாடுகளில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் எந்தப் பொருள்களையும் விமானத்தில் வரும் பயணிகள் கொண்டுவர வேண்டாம் என சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை மேலும்  கூறியது:  இலங்கை, துபை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு  கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்குச் செல்கின்றனர். அவ்வாறு சென்றவர்கள் மீண்டும் மதுரைக்கு வரும்போது அங்கிருக்கும்  அறிமுகம் இல்லாத சிலர் சில பொருள்களை கொடுத்து விடுகின்றனர். அவற்றைக் கொண்டு வருவதற்கு பயணிகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை அன்பளிப்புகளும் கொடுக்கின்றனர்.  இந்த பணத்திற்கு ஆசைப்பட்டு வெளிநாட்டில் பணிபுரியும் அப்பாவி கிராமத்து இளைஞர்களும்  அப் பொருள்களை விமானத்தில் மதுரைக்கு கொண்டுவருகின்றனர். அதில் சுங்கத்துறையினர் நடத்தும் சோதனையில் அவை கடத்தல் தங்கமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த பொருளின் மதிப்பில் 10 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் துபையிலிருந்து வந்த இளைஞரிடம் அறிமுகம் இல்லாத நபர் பார்சல் ஒன்றை கொடுத்தனுப்பினார். அதற்காக அவருக்கு ரூ .5 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இளைஞர் ரூ. 5 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு பார்சலை மதுரை விமானநிலையம் கொண்டு வந்தார். சோதனையில் அந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதேபோல ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் சிவகங்கையைச் சேர்ந்த ஸ்டீபன்(30)என்பவர் கொண்டுவந்த பூ ஜாடியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் துகள்களாக இருந்தது. இதையடுத்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  விசாரணையில் அவரிடம் துபை விமான  நிலையத்தில் மர்மநபர் கொடுத்தனுப்பியது தெரிந்தது. ரூ.5 ஆயிரத்திற்காக ரூ.50 ஆயிரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் எந்த பொருள்களையும் கொண்டு வரவேண்டாம் என்றார்.

Post a Comment

0 Comments