டெல்லியில் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்த இஸ்லாமியரை சரமாரியாக தாக்கிய சமூக விரோதிகள்



டெல்லியில் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்ததால் 3 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக முஸ்லிம் மதபோதகர் புகார் தெரிவித்துள்ளார்.
ரோகிணி செக்டார் பகுதியில் உள்ள மதரசாவில் திருகுர்ஆன் பயிற்சி அளிக்கும் மதபோதகர் மவுலானா மொமின். இவர் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் வந்து வழிமறித்த 3 பேர் மவுலானா மொமினிடம் கை குலுக்கினர். பின்னர் அவரிடம் நலம் விசாரித்தனர். இதற்கு பதிலளித்த அவர் அல்லாஹ்வின் கருணையால் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த 3 நபர்களும் மவுலானாவை ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட வலியுறுத்தினர். மறுத்ததால் மொமீனை கடுமையாக தாக்கிய நபர்கள் அவரை மேலே தூக்கி வீசினர். அதில் மொமீன் கடுமையாக காயமடைந்தார். மயக்கமடைந்த மொமினை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மொமினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதலில் ஈடுபட்டுள்ள 3 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ரோகிணி செக்டார் 20-ல் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் 3 பேரும் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments