புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு ஆக 7-ந் தேதி பல்வேறு போட்டிகள்!



பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில்
புதுக்கோட்டை மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் ஒருங்கே பங்கேற்கும் வகையில், தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் தனித்தனியே தமிழ் வளர்ச்சி துறையால் ஆகஸ்டு 7-ந் தேதி காலை 9.30 மணியளவில் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் நடைபெற உள்ளது. போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்று, ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை, சான்றிதழும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.7 ஆயிரம் பரிசுத் தொகை, சான்றிதழும், 3-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை, சான்றிதழும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள படிவத்தை நிறைவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் போட்டிகள் தொடங்கும் முன்பே போட்டி நடைபெறும் இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் அளிக்கப்பட வேண்டும். படிவம் இன்றி வெறும் பரிந்துரையுடன் வரும் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார் கள். ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் 3 பேர் மட்டுமே ஒரு பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாணவர் கண்டிப்பாக ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

இதற்கு முன்பு இப்போட்டிகளில் பங்கேற்று 2 முறை பரிசுகள் பெற்றிருப்பின் மீண்டும் அதே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். போட்டிகளுக்கான தலைப்புகள் நடுவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முன்னிலையில் போட்டிகள் நடைபெறும் நேர தொடக்கத்தில் அறிவிக்கப்பெறும்.

போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பெறமாட்டாது. போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments