தொண்டி பகுதியில் அச்சுறுத்தும் போதை ஆசாமிகள் நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்



தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் போதை ஆசாமிகள் குடித்து விட்டு ரோட்டில் நின்று சண்டை போடுகின்றனர்.


இது வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆபாச வார்த்தைகளால் திட்டுவது, அருகில் இருக்கும் பெண்களை முகம் சுழிக்க வைக்கிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் போதையில் இருப்பதால் ஏதும் செய்ய முடியாது என விட்டு விடுகின்றனர். இதனால் அவர்கள் இச்செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நம்புதாளை செய்யது நெய்னா கூறுகையில், போதையை போட்டு விட்டு அரை நிர்வாணமாக ரோட்டில் சண்டை போடுகின்றனர்.

ஆயுதங்களை தூக்கிக் கொண்டு சண்டை போடுவதால் அச்சமாக உள்ளது. மேலும் கடும் ஆபாச வார்த்தைகள் பேசுவதால் பெண்கள் கூச்சப்பட வேண்டியுள்ளது.

இதுகுறிதது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.போலீசார் தரப்பில் கூறியது, போதையில் இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதனால் விட்டு விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் யாரும் புகார் தராததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கின்றனர்.

Post a Comment

0 Comments