புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர், கிறித்தவ மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அறிவிப்பு



சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற மாணவ, மாணவியர்கள்
விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள
இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன
மதத்தைச் சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய, மாநில அரசால்
அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 கல்வியாண்டில்
ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும்(Prematric Scholarship),

11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் (Postmatric Scholarship)

மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழிழ்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை (Merit-cum-Means) பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை மாணவ, மாணவியர்களின்
வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை புதியது மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு 15.10.2019
வரையிலும், பள்ளி மேல்படிப்பு, மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை இனங்களுக்கு 31.10.2019 வரையிலும் மாணவ, மாணவியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பாத மாணவ, மாணவியர்களின் இணைய தள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

 இணையதளத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை மிகுந்த கவனத்துடன்
உள்ளீடு செய்யவேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது. மாணவ, மாணவியரின் ஆதார் எண்களின் விவரம், விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தில் பகிரப்படமாட்டாது.

 கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை
அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
விவரங்களை சான்றாவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும்
இணையதளம் மூலம் அனுப்பப்பட்ட சரிபார்ப்பு சான்றினை மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கினால் மட்டுமே கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தின் மூலம் பரிந்துரை செய்ய இயலும்.

மைய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (NSP) பழைய
மற்றும் புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE/AISHE குறியீட்டு எண் அவசியமாகும். 26.07.2019க்குள் பழைய மற்றும் புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் தங்களது கல்வி நிலையத்தின் அடிப்படை விவரங்களை உடன் பதிவு செய்து இரு பிரதிகள் எடுத்து கல்வி உதவித் தொகை பொறுப்பு அலுவலரின் புகைப்படம் ஒட்டி  தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து ஒரு பிரதியில் மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு
கொண்டு கல்வி நிறுவனத்தின் பதிவை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தங்களுக்கான பயனாளர் குறியீட்டு (Login/Password) விவரங்களை
உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் NSP இணையதளத்தில்
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் தொலைபேசி எண்கள் அல்லது பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE/AISHE குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

 மேற்படி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில்
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான, இணைக்கப்பட வேண்டிய
ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விளம்பரங்கள்
http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டம் தொடர்பான மைய அரசால்
வெளியிடப்பட்ட நெறிமுறைகள் http://minorityaffairs.gov.in/schemesperformance/scholarship-schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/07/2019072576-1.pdf

Post a Comment

0 Comments