தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரிக்கை



ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாக்க வேண்டும் என்று  இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது தொண்டி பேரூராட்சி. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனைச் சுற்றி தொண்டி சின்ன தொண்டி, நம்புதாளை, விளக்கனேந்தல், பெருமானேந்தல்,  நரிக்குடி, நவகோடி, சோழியக்குடி, எம்.ஆர்.பட்டினம், புதுப்பட்டினம், மணக்குடி முள்ளிமுனை, காரங்காடு  உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம்  20 படுக்கைகள் கொண்டது. நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட  புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமையிடமாகக் கொண்டு தொண்டி, எஸ்பி பட்டினம், திருவொற்றியூர், பாண்டுகுடி, மங்கலக்குடி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

இதில் சுமார் 15 மருத்துவர்கள் பணி புரிய வேண்டும் ஆனால் இங்கு 8 மருத்துவர்களே உள்ளனர். அதேபோல் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் வட்டார மருத்துவ அலுவலர் உள்பட 2 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அதே போல் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் பற்றாகுறையாக உள்ளது. தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் ஒன்றுக்கு சராசரி 30 பிரசவங்கள் நடைபெறுகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

 இருப்பினும் இங்கு போதுமான மருத்துவர்களும் போதுமான மருத்துவப் பணியாளர்களும் இல்லாதபட்சத்தில் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

மேலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரே ஆரம்ப சுகாதார நிலையம்  தொண்டியில் மட்டுமே உள்ளது. இப்பகுதியில் ஏற்படக்கூடிய விபத்துக்களின் போது உரிய முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக ஆக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தமுமுக மாநிலச் செயலாளர் சாதிக்பாட்சா கூறியது:

தொண்டியில் பல ஆண்டுகளாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அரசு மருத்துவமனையாக செயல் பட்டு வந்தது.

காலப்போக்கில் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது.

போதுமான மருத்துவர்கள் இல்லாததால் இப்பகுதியில் விபத்தால் ஏற்படக்கூடிய நபர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. சுமார் 60 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கோவை, காரைக்குடி, தேவகோட்டை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை  இப்பகுதி மக்கள் தொகைக்கு ஏற்றார்போல்,  அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments