முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 423 புதிய சிகிச்சை.! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்



புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் கடந்த (22.09.2019) துவக்கி வைத்தார். இம்முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து தெரிவித்ததாவது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரி திட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்துடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்றையதினம் சென்னையில் 7,000 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முழு பயனையும் தமிழகத்தில் உள்ள 1.58 கோடி காப்பீட்டு அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம்  மதிப்பீட்டில் எவ்வித கட்டணமுமின்றி விலையில்லாமல் செயற்கை கால்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கனவே இல்லாத 423 புதிய சிகிச்சை முறைகள் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை பயன்பெற முடியும்.இந்த காப்பீட்டு திட்டத்தை விரிவு படுத்தவும் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் தாலுக்காக்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில்
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விராலிமலை, இலுப்பூர்,
அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு
மருத்துவ முகாம்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளை தேடி மக்கள் என்ற நிலையினை மாற்றி மக்களை
தேடி மருத்துவவசதி என்ற நிலை இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்கள்
மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு
திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 37 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
மேலும் சிறுநீரகம், இதயம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற
பல்வேறு உயர் சிகிச்சைகள் மூலம் 7,600 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் பொதுமக்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளதை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு உறுதிபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மழையினால் காலநிலை மாறுபடுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சுகாதாரத்துறை தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒரே நேரத்தில் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்தல், குளோரினேசன் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், கொசுபுழு வளரும் இடங்களை கண்டறிந்து  அழிக்கவும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுருத்தலின் படி 1.65 லட்சம் எண்ணிக்கையிலான மஸ்தூர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என்று பிரத்யேக வார்டுகள் அமைகப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ராஜாலிப்பட்டியை சேர்ந்த ஜான்சி விபத்தினால்
பாதிக்கப்பட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை
செய்யப்பட்டு, அவரது கால் அகற்றப்பட்ட நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா செயற்கை காலினை பயனாளிக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.இரா.சின்னதம்பி, மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பழனியாண்டி, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சந்திரசேகர், துணை இயக்குநர் (பொதுசுகாதாரம்) மரு.பரணிதரன், மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர்கள் சுவாமிநாதன், பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments