புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இலவசமாக பணை மற்றும் பலன் தரும் மரக்கன்று பெற கலெக்டர் அழைப்பு



புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பணை மற்றும் பலன் தரும்
மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வருமானத்தை உயர்த்தி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய உத்திகளை புகுத்தி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பனை மரம் தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது. பனை மரத்தில், வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை-பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரை ஓலை, குருத்தோலை என அனைத்து பாகங்களுமே பயன்தரக்கூடியது. இந்தக் காரணங்களாலேயே பனைக்கு 'கற்பக விருட்சம்' என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். இம்மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் ஆரோக்கியமான
பானம் ஆகும். நுங்கும் பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. இவற்றின் ஓலை, கூடைகள் தயாரிக்கவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகிறது. தண்டுப்பகுதி வீடு கட்டப் பயன்படுகிறது. பனஞ்சாறு கற்கண்டாகவும, கருப்பட்டியாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

பனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாட்டில் பனை மரங்களின் சாகுபடியினை உயர்த்தி, பனை மரங்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் 'நிலத்தடி நீரை பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனை மரங்களுக்கு' மாண்புமிகு அம்மாவின்  அரசு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்தார்கள்.

அதன்படி, நடப்பு ஆண்டில் 2 கோடி பனைமர விதைகளை மானாவாரி விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக 'நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின்' கீழ் மாநில அரசு ரூ.8 கோடி நிதி வழங்கி அரசு ஆணை வெளியிட்டு பனை மர விதைகள் கொள்முதல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஒரு எக்டர் மானாவாரி நிலத்திற்கு 50 பனை மர விதைகள் வீதம், விநியோகிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 8.00
இலட்சம் பனை மர விதைகள் விநியோகத்திற்காக 32.00 இலட்சம் ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

இதே போன்று மானாவாரி நிலங்களை பசுமைப் போர்வை போன்று மாற்றும் வகையில், நடப்பாண்டில் எக்டருக்கு ரூ.100 மதிப்புள்ள வாகை, தேக்கு, புளி, வேம்பு, இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பலன்தரும் மரங்களின் கன்றுகளும் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்பதாயிரம் (80,000) பயன்தரும் மரங்களின் கன்றுகள் விநியோகத்திற்காக 16.00 இலட்சம் ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

மானாவாரி விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகள் பனை மற்றும் இதர பயன்தரும்
மரக்கன்றுகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.

Source: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2019/09/2019091859.pdf

Post a Comment

0 Comments