மணமேல்குடியில் பொது மக்களுக்கு இடையூறாக பொதுக்கூட்டம் நடத்த தடை: உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு



பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயராமன் தாக்கல் செய்த மனு: மணல்மேல்குடி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். இச் சந்தையில் மணல்மேல்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இந்நிலையில், இன்று செப்டம்பர் 22-ஆம் தேதி மணல்மேல்குடி பேருந்து நிலையம் அருகில் கட்சிப் பொதுக்கூட்டம் நடைபெறுவதால், வாரச்சந்தை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இது தொடர்பாக காவல் துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை. எனவே, இன்று செப்டம்பர் 22-ஆம் தேதி வார சந்தை நடைபெறும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல்மேல்குடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பொதுக்கூட்டத்தினால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என காவல்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பேருந்து நிலைய வளாகத்திலும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த மணல்மேல்குடி காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Post a Comment

0 Comments