தொண்டி அருகே கடற்கரையில் இறந்து ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்: ஆய்வு செய்யக் கோரிக்கை



திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் கடந்த சில நாள்களாக உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை மாலையில் சுமார் 10 கிலோ எடை அளவு கொண்ட கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கடலோர வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
வனவர் ஜோசப், வேட்டைதடுப்பு காவலர்கள் செல்வராஜ், அய்யர்பிச்சை, பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆமையை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு பின் கடற்கரையில் குழி தோண்டி புதைத்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்

10 கிலோ எடையுள்ள இந்த ஆமை அழுகிய நிலையில் காணப்பட்டதால் எந்த வகையானது என கண்டுபிடிக்கமுடியவில்லை. இது படகில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

கடல் பசு, கடல் ஆமை, அரிய வகை மீன்கள், டால்பின்கள் என பல்வேறு வகையான கடல் வாழ் உயிரினங்கள்  கடந்த சில நாள்களாக உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.

இதனை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு கடல் வாழ் உயிரினங்களை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments