ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்




ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி அவர்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20-ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் செப்டம்பர் 2019-ம் ஆண்டு முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களி லிருந்து கட்டணமின்றி பெறலாம்.

விண்ணப்பிக்கலாம்
இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பபடிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்து வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம் பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு வருகிற 30-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். நேரில் வரவேண்டியதில்லை.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குனரகம், சென்னை தொலைபேசி எண் 044-28520033-ஐ தொடர்பு கொள்ளலாம். ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்கள் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments