கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காசுல்..



இமயமலைக்கு தென்புறத்தில் காஷ்மீர் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, கடும் குளிர்காலத்தில் தென்னிந்திய பகுதிகளான கர்நாடகா, கேரளா, தமிழகப் பகுதிகளுக்கும் இலங்கைக்கும் சென்று வரும் சிறு பறவை நம்ம ஊர் பகுதியில் காசுல் என்று அழைக்கப்படும் இந்தியன் பிட்டா (Indian Pitta).
வானவில்லின் ஏழு வண்ணங்களுடன் கருப்பு, வெண்மை இரண்டறக் கலந்து காணப்படும் இப்பறவை மரங்களில் கூடுகட்டி தங்கினாலும், அவ்வளவு சுலபமாய் கண்களி்ல் அகப்படாது.

தரையில் வளர்ந்து நிற்கும் புல்வெளிகள், செடிகொடிகள், சருகுகளுக்குள் கிளறிக் கிளறி அதில் காணப்படும் புழு, பூச்சிகளை பிடித்து சாப்பிடும் குருவியாதலால், புதர்கள் மற்றும் குப்பைகளுக்குள்ளேயே மறைந்து ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த குருவி சமீப காலமாக கோபாலப்பட்டிணம், கீழஏம்பல், அம்பலவனேந்தல் மற்றும் குமரப்பன்வயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வரத் தொடங்கியுள்ளது.

பொதுவாக இக்குருவிகளை ஜோடியாக பார்ப்பதும் அரிது. இது ஒரு பகுதியில் இருந்தால் அதிக பட்சம் ஏழெட்டு குருவிகளே இருக்கும். அதுவும் தனித்தனியாக புதருக்குள் கிளறிக் கொண்டிருக்கும். மரத்தில் அடையும் போது மட்டும் கிளைக்கு கிளை தாவும்.


இதன் சிறகுப் போர்வையில் பல நிறங்கள் இருப்பதாலும், புழு, பூச்சிகளை தேடித்தேடி உண்பதாலும் இதற்கு பஞ்சவர்ணக் குருவி, பொன்னி குருவி, ஆறுமணிக்குருவி, பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, கஞ்சால் குருவி, காளிக்குருவி என்று பெயர் வைத்துள்ளார்களாம் கிராமத்து மக்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments