அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீணாகி வரும் புதிய ஜெனரேட்டர்கள்



அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 2 ஜெனரேட்டர்கள் மழையில் வீணாகி வருகிறது.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் 52 கிராம ஊராட்சிகளை கொண்டது. இதில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களுள் அறந்தாங்கியும் ஒன்று.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதிகள், கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் இந்த ஒன்றியத்தின் பல பகுதிகளில் மின்சார வினியோகம் இல்லை.

இதனால் கிராமப்பகுதிகளில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம ஊராட்சிகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கஜா புயலின் தாக்கம் குறைந்த பிறகு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பல லட்ச ரூபாய் செலவில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 ஜெனரேட்டர்களை வாங்கியது.

அப்போது வாங்கப்பட்ட ஜெனரேட்டர்கள் கிராமப்பகுதிகளுக்கு கொண்டு செல்லாமல் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டது.

எவ்வித பயன்பாடு இல்லாமல் ஊராட்சி ஒன்றி அலுவலக வளாகத்தில் மழை, வெயிலில் கேட்பாரற்று கிடக்கிறது.. பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 2 ஜெனரேட்டர்களை பயன்பாடின்றி போட்டு வைத்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு தேவைப்படாத ஒரு பொருளை பல லட்ச ரூபாய் செலவழித்து வாங்கிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், அதை பயன்படுத்தவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேவையில்லாமல் வாங்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்களை உடனடியாக விற்பனை செய்து அந்த நிதியை ஒன்றிய பொதுநிதியில் சேர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால், ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ள பகுதியில் மழைநீர் விழாத வகையில் கொட்டகை போட்டு, பல லட்ச ரூபாய் செலவு செய்து ஜெனரேட்டரை மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments