41 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை: நாளை மறுநாள் தொடக்கம்



சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து, ஏர் இண்டியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.

 ஏற்கனவே, யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் விமான சேவைகள் நடந்து வந்தன. ஆனால், இலங்கையில் உள்நாட்டு போர் தொடங்கி நடந்தபோது யாழ்ப்பாணம் விமான நிலையம் முழுவதுமாக சேதமடைந்தது.

இதனால் யாழ்ப்பாணம் -இந்தியா இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

 இலங்கையில் அமைதி திரும்பியதும் விமான சேவையை தொடங்கவேண்டும் என்று இலங்கையில் உள்ள தமிழர்களும் இந்தியாவில் தென் மாநிலங்களில் உள்ளவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், யாழ்ப்பாணம் விமான நிலையம் முழுவதும் சீரமைக்கப்பட்ட பின்பே விமான சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் விமான நிலையம் சீரமைக்கப்பட்டு கடந்த மாதம் திறப்பு விழா நடந்தது. அன்றைய தினமே சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஏர் இண்டியாவின் அலையன்ஸ் ஏர் சோதனை ஓட்டம் நடத்தியது.

பின்பு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏர் இண்டியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் இலங்கை யாழ்ப்பாணத்துக்கு சென்னையில் இருந்து திங்கள், புதன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த மூன்று நாட்களிலும் சென்னையில் இருந்து  அலையன்ஸ் ஏர் விமானம் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் அலையன்ஸ் ஏர் விமானம் பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த விமானத்தில் பயணிகளுக்கான விமான கட்டணம் நபர் ஒருவருக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல ₹3,990 ஆகும். வரிகள் தனி.

அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வர நபர் ஒருவருக்கு விமான கட்டணம் 3,190, வரிகள் தனி.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் விமான சேவை பயணிகள் வரவேற்பை பொறுத்து, தினசரி விமானமாகவும் மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

41 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை நாளை மறுநாள் தொடங்குகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments