மணமேல்குடி அருகே சாலை வசதியின்றி தீவு போல மாறிய குடுவையூர் பள்ளி மாணவிகள் கடும் அவதி



மணமேல்குடி அருகே சாலை வசதிகூட இல்லாமல், தீவு போல மாறியுள்ள தீரர் சத்தியமூர்த்தியின் பூர்வீக ஊருக்கு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், காமராஜரின் அரசியல் குருவாகவும், தலைசிறந்த வழக்கறிஞராகவும், சென்னை மேயராகவும் பணியாற்றியவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் சென்னை மேயராக பணியாற்றியபோது, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1944ம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கத்தை உருவாக்கினார். சத்தியமூர்த்தியின் இந்த அபாரபணியை மக்கள் நினைவுகூர வேண்டும் என்பதற்காக குமராசாமி ராஜா பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சத்தியமூர்த்தி சாகரம் என பெயர் வைத்தார். இன்று சென்னை மாநகரம் இந்தியாவில் உள்ள பெரிய மாநகர்களில் ஒன்றாக திகழும் நிலையில் தீரர் சத்தியமூர்த்தி உருவாக்கிய சத்தியமூர்த்தி சாகரம் சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்க்கும் நீர்நிலைகளில் ஒன்றாக திகழ்கிறது.இதுபோல பல்வேறு சிறப்புகளை கொண்டிருந்த தீரர் சத்தியமூர்த்தியின் பூர்வீகம் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள செம்மனாம்பொட்டலை அடுத்த குடுவையூர்.

இந்த குடுவையூரில் தீரர் சத்தியமூர்த்தியின் மூதாதையர் வாழ்ந்த வீட்டின் சிதைந்த பகுதிகள் உள்ளன. மேலும் அவர்களின் குலதெய்வம் இங்கு உள்ளது. இந்த குலதெய்வத்தை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.

குடுவையூரில் தற்போது 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்கள் செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பழுதடைந்து வாகனங்களே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவ,மாணவியர், வேலைக்கு செல்வோர், குடுவையூரில் இருந்து ஆவுடையார்கோவில்-கோட்டைப்பட்டினம் மெயின்ரோட்டிற்கு வருவதற்கு இடையில் ஓடும் சிறு ஓடையை கடந்து செல்ல வேண்டும்.

மேலும் மழைக்காலங்களில் குடுவையூரில் இருந்து மெயின்ரோட்டிற்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால், மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏவாக உள்ள ரத்தினசபாபதியின் ஊருக்கு அருகே குடுவையூர் உள்ளது.

இருப்பினும் இந்த ஊருக்கு சாலை அமைத்து கொடுக்காததால், அப்பகுதி மக்கள மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது:காமராஜரின் அரசியல் குருவான தீரர்சத்தியமூர்த்தி பூர்வீக ஊரான குடுவையூருக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை.

மண் சாலையிலேயே செல்ல வேண்டி உள்ளது. மழை பெய்தால், சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த சாலை வழியாக மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும் தலைநகர் சென்னையில் வாழும் அனைவருக்கும் குடிநீர் வழங்கிய தீரர்சத்தியமூர்த்தியின் சொந்த ஊர் முறையான சாலை வசதி கூட இல்லாமல் தீவு போல மாறியுள்ளது. இதுகுறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தீரர்சத்தியமூர்த்தி போன்ற தலைவர்கள் மக்களின் நலனையே தன் நலனாக கொண்டு, மக்கள் பணியாற்றி மறைந்துவிட்டனர். அவர்கள் மறைந்தாலும், அவர்கள் மக்களுக்கு செய்துவிட்டு சென்ற நல்ல காரியங்கள் என்றைக்குமே மக்களின் மனதில் நிற்கும்.
சென்னை மாநகரில் மாநிலத்தின் முதல் குடிமகன் ஆளுனர் முதல் சாதாரண குடிமகன்கள் வரை பயன்படுத்துவதற்கு குடிநீரை சேமித்து வைக்க சத்தியமூர்த்தி சாகரம் எனும் பூண்டி நீர்த்தேக்கம் கட்டிய தீரரின் பூர்வீக ஊரில் சாலை இல்லாதது வெட்ககேடான விசயம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடுவையூருக்கு செல்லும் சாலையை சீரமைத்தும், பொதுமக்கள் பயன்படுத்தும் மண் சாலையை தார்சாலையாக மாற்றி, பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments