கலங்கடித்த கஜா புயல்..! ஓராண்டின் மறையாத சுவடுகள்..!



காவிரி டெல்டா மாவட்டங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பலவிதமான சோதனையை அனுபவித்து வருகிறது. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மிகப்பெரிய சுனாமி தாக்குதல் தமிழகத்தையே உலுக்கி போட்டது. அதில் நாகை மாவட்டம் தான் பெரும் பாதிப்பை சந்தித்தது.
டெல்டா மாவட்ட மக்கள் மனதில் இருந்து இந்த சோக சம்பவம் நீங்குவதற்குள் கடந்த ஆண்டு 15.11.2018ல் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் கஜா புயல் என்னும் கோர அரக்கனின் தாக்குதலுக்கு ஆளானது.

கஜா புயல் என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழக கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவு தொடங்கி 16ம் தேதி காலை வரை புரட்டி போட்டது கஜா புயல். நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடிய கஜா புயல் கணக்கில் அடங்காத தென்னை மரங்கள், விசைப்படகுகள், வீடுகள் என்று எல்லாவற்றையும் அள்ளிச்சென்றது. கஜா புயல் கோர தாண்டவம் ஆடி 1 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இன்று வரை அப்பகுதி மக்கள் மீளமுடியாத துயரத்தில் தான் இருக்கின்றனர்.


திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆன பின்னரும் இதுவரையில் பல்வேறு கிராமங்களை இன்று வரையில் மின்சாரம் என்பது சென்றடையாமல் இருந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம்: திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் திருவாரூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு சார்பில் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவைகள் பொது மக்களை சரிவர சென்றடைய வில்லை.

இதன் காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் தொடர்ந்து 6 மாத காலம் வரையில் ஈடுபட்டனர். இந்த புயல் காரணமாக மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கணக்கிடப்பட்ட நிலையில் இதில் 60 சதவிகித பேர்களை கூட நிவாரணத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் சென்றடையவில்லை. மேலும் மாவட்டத்தில் மின்சார விநியோகம் என்பதும் பல்வேறு கிராமங்களில் தற்போது வரையில் சரிவர வழங்கப்படாமல் இருந்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் இருந்து வரும் அக்கரை உடையார் தெரு, நடுத்தெரு வழியாக எண்கன் வரையில் செல்லும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்த நிலையில் தற்போது ஒரு வருட காலம் ஆன பின்னரும் அங்கு மின்விநியோகம் என்பது இல்லாமல் இருந்து வருவதால் தெரு விளக்குகள் எரியாமல் பொது மக்கள் மட்டுமின்றி இரவு நேரங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காற்றில் பறக்கும் அரசின் அறிவிப்புகள்: இதேபோல் சாய்ந்த மரங்களை தமிழ்நாடு பேப்பர் கழகம் (டி.என்.பி.எல்) மற்றும் மரவியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் அறிவிப்பாகவே இருந்தது. மேலும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் தலைமையிலான குழு அமைக்கப்படும், ஊருக்குள் வந்த கடல் சகதி அகற்றப்படும், பாதிக்கப்பட்ட மா, பலா, தென்னை, முந்திரி உட்பட அனைத்து மரங்களும் உயர் தொழில்நுட்பத்தில் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புகளும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது.

தஞ்சையில் சேதம்: தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 17 பேர் பலியானார்கள். 36 லட்சத்து 99 ஆயிரத்து 197 தென்னை மரங்கள்தரையோடு தரையாக சாய்ந்து போனது. இது 57ஆயிரத்து429 விவசாயிகளுக்கு சொந்தமானது. ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் என மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 179 வீடுகள் சேதத்திற்குள்ளானது. நெல், கரும்பு, சோளம் ஆகிய பயிர்கள் 1,678 ஹெக்டேரில் அழிவை சந்தித்தன. இது1,953 விவசாயிகளுக்கு சொந்தமானது. ஆடு, மாடு, கோழி என 1,703 கால்நடைகள் பாதிக்கப்பட்டன. 5லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்து போனது. மீனவர்களின் 1150படகுகளும், 1,193 படகுகளில் இன்ஜினும், 1497 வலைகளும் சேதமடைந்தது. தஞ்சை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னைதான். கஜா புயலால் இந்த மாவட்டத்தில் மட்டும் 36 லட்சத்து 99ஆயிரத்து 197 தென்னை மரங்கள் சாய்ந்ததால் ஒட்டுமொத்த தென்னை விவசாயமும் பாதிக்கப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments