உள்ளாட்சி தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகிறது - ஓட்டுச்சீட்டு அச்சடிப்பு பணி தீவிரம்



உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் ஓரளவு முடிந்து விட்டதால், 1 வாரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

ஆனால் மாநில தேர்தல் கமி‌ஷன் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தேர்தல் நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறது.

அதற்கேற்ப உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் அட்டவணையை சமர்பிக்க 4 வார கால அவகாசம் கேட்டுள்ளனர்.

தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை முடித்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் உள்ளது.

அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான நடவடிக்கையிலும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்.

கிராம பஞ்சாயத்துக்களை பொறுத்தவரை ஓட்டு சீட்டு முறையில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ஓட்டு சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு டெண்டர் விடப்படிருந்தது. அதன்படி காகிதம் கொள்முதல் செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

மின்னணு எந்திரங்களை கையாள்வது, தொடர்பாகவும் ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பெயர் விவரங்களும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடுபடி பட்டியலும் தயாரிக்கப்பட்டு முடிவு பெறும் தருவாயில் உள்ளது.

உள்ளாட்சி அமைப்பின் 5 அடுக்கு முறைக்கு தேர்தல் நடைபெறும்போது 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதை செய்து கொடுக்க அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் முடிவுபெறும் நிலையில் இருப்பதால் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், ஓட்டுப்பதிவு நாள், ஓட்டு எண்ணிக்கை நாள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் 1 வாரத்தில் தாக்கல் செய்யும் என தெரிகிறது.

அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதியை வெளிப்படையாக தேர்தல் கமி‌ஷன் அறிவிக்கும். அனேகமாக 1 வாரத்தில் தேர்தல் தேதி தெரிந்து விடும்.

இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பின் உயர் அதிகாரி கூறியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த இட ஒதுக்கீடானது சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதை தவிர்த்து பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இதன்படி மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், மாவட்ட, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கிராம ஊராட்சி தலைவர், ஆகிய பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு படி பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் ஓரளவு முடிந்து விட்டதால், 1 வாரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments