சாத்தான்குளம் சாலையில், ரெயில்வே கேட் அமைக்க எம்.பி.யிடம் பொதுமக்கள் கோரிக்கை



சாத்தான்குளம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நவாஸ்கனி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் குயவன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தான்குளம்-முனியன்வலசை உள்ளது. இந்த கிராமத்திற்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் பிரிவு சாலையில் செல்ல வேண்டும். முனியன்வலசை பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கார், மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல முடியும். மழைக்காலத்தில் இந்த பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் மாற்று வழியில் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதையடுத்து இங்கு ரெயில்வே கேட் அமைக்க தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்தநிலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் சாத்தான்குளம்-முனியன்வலசை பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையை நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது முனியன்வலசை கிராம மக்கள் சார்பில் எம்.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
முனியன்வலசை பகுதியில் சுமார் 140 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ரெயில்வே கேட் அமைக்கப்படாமல், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் எங்கள் ஊரில் இறந்தவர்களின் சடலத்தை கூட இந்த வழியாக மயானத்திற்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. மேலும் மழைக்காலங்களில் இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி இங்கு ரெயில்வே கேட் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட நவாஸ்கனி எம்.பி. கூறும்போது, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன். தற்போது இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஆட்டோ, கார், மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாணி, வலசை, சாத்தான்குளம் சாலையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே ரெயில்வே மந்திரியை நேரில் சந்தித்து இதுகுறித்து கூறி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவேன் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments