கல்வியுடன் கூடிய நீதிபோதனைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு



ஆசிரியர்கள் கல்வியுடன் கூடிய நீதிபோதனைகளை அதிக அளவில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஊழல் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஊழலுக்கு எதிரான நேர்மை உறுதிமொழியினை எடுத்து கொண்டனர். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊழலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு படிக்கும் காலத்திலேயே ஊழலுக்கு எதிரான இதுபோன்ற விழிப்புணர்வு மூலம் எதிர் காலத்தில் லஞ்சமற்ற சமுதாயமாக மாற்ற முடியும்.

கல்வியுடன் கூடிய நீதிபோதனைகள்

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து நல்ல கருத்துகளை பயிற்றுவிப்பதுடன் சமுதாயத்தில் அவர்கள் நேர்மையாக வாழும் வகையில் கல்வியுடன் கூடிய நீதிபோதனைகளையும் அதிக அளவில் பயிற்றுவிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் இதுபோன்ற வகுப்புகளை முறையாக கற்று எதிர் காலத்தில் சிறந்த நபர்களாக உருவாக வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் பேசி னார்.

நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments