அன்னவாசல் அருகே சிறுவனின் மூக்குக்குள் சென்ற சிலேபி மீன்..!



புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளிக்கும்போது சிறுவனின் மூக்குக்குள் சென்று வேதனை கொடுத்த மீனை அன்னவாசல் அரசு மருத்துவர் லாவகமாக அகற்றி சிறுவனின் வேதனையைப் போக்கினார்.

அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் அருள்குமார்(12). இவன் அன்னவாசல் பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனின் மூக்குக்குள் சின்ன சிலேபி மீன் சென்றுவிட்டது. இதனால் சிறுவன் கடும் வேதனையடைந்தான். வலியால் தாங்க முடியாமல் சிறுவன் துடித்துள்ளான்.


சிறுவனின் உறவினர்கள் சிறுவனை அருகே உள்ள அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் கதிரவன், உடனே மூக்கின் உள்ளே இருந்த மீனை வெளியே எடுக்கத் திட்டமிட்டார். அதன்படி, கதிரவன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சையளித்து லாவகமாக சின்ன சிலேபி மீனை வெளியே எடுத்தனர். மீன் வெளியே வந்த பிறகு பழைய நிலைக்கு சிறுவன் திரும்பினான்.

இதுபற்றி மருத்துவர் கூறியதாவது, ``மாணவன் குளித்துக் கொண்டிருக்கும்போது, அவருக்கே தெரியாமல் சின்ன சிலேபி மீன் அவனது மூக்குக்குள் சென்றுள்ளது. உறவினர்கள் யாரும் வெளியே எடுக்க முயற்சி செய்யாமல், உடனே மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். உடனே சிறுவனுக்கு சிகிச்சையளித்து சிறுவன் மூக்கில் இருந்த மீனை உயிருடனே மீட்டுவிட்டோம்" என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments