8 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிய பழைய பேருந்துகளை அறந்தாங்கி பணிமனைக்கு வழங்குவதால் மக்கள் அவதி



8 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிய பழைய பேருந்துகளை அறந்தாங்கி பணிமனைக்கு வழங்குவதால் மக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

அறந்தாங்கி :புதுக்கோட்டை பணிமனையில் 8 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய ஓட்டை உடைசல் பேருந்துகளை அறந்தாங்கி பணிமனைக்கு வழங்குவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்த பெரிய பணிமணையாக அறந்தாங்கி பணிமணை விளங்குகிறது. இந்த பணிமணையில் 26 நகரப்பேருந்துகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன.

கடந்த திமுக ஆட்சியின்போது அறந்தாங்கி பணிமனையில் இருந்து இயங்கும் நகரப் பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன.புதிய பேருந்துகள் இயக்கப்பட்டதால், அறந்தாங்கியில் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் கிராமப்பகுதிகளுக்கு தடையின்றி பேருந்துகள் சென்று வந்ததால், பொதுமக்கள் சிரமமின்றி வெளியூர்களுக்கு சென்று வந்தனர்.இந்த நிலையில் அதிமுக ஆட்சியின்போது, அரசு போக்குவரத்து கழகத்தில் நகரப் பேருந்துகளுக்கு புதிய பேருந்துகள் வழங்கப்படாததால், ஏற்கனவே இயக்கப்பட்;ட புதிய பேருந்துகள் தற்போது, தனது ஆயுள் காலத்தை கடந்தும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் அறந்தாங்கி பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வரும் 6,24,26 ஆகிய தடங்களில் இயங்கிய நகரப்பேருந்துகள் மிகவும் பழுதடைந்தன. இந்த பழுதடைந்த பேருந்துகளுக்கு பதிலாக ஏற்கனவே நீண்ட தூரம் இயங்கிய பேருந்துகளை நகரப் பேருந்துகளாக மாற்றி இயக்காமல், புதுக்கோட்டை பணிமனையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இயங்கி , கழிவு செய்யப்படும் நிலையில் உள்ள ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.

 புதுக்கோட்டை பணிமனையில் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி, கழிவு செய்யப்படும் நிலையில் உள்ள ஓட்டை உடைசல் பேருந்துகளை அறந்தாங்கி பணிமனைக்கு வழங்கி, 6,24,26 ஆகிய நகரப்பேருந்துகளுக்கு பதிலாக போக்குவரத்து கழகம் இயக்க உத்தரவிட்டதால், அந்த பழைய பேருந்துகள் அடிக்கடி பழுதடைகின்றன. பேருந்துகள் பழுதடைவதால், கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அந்த பழைய பேருந்துகள் மழை பெய்யும்போது ஒழுகுவதால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், பேருந்துகளில் அமர்ந்து செல்ல முடியாமல் குடை பிடித்துக் கொண்டே நிற்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறியது: அறந்தாங்கியில் புதிய நகரப் பேருந்துகள் இயங்கியபோது, கிராமப்பகுதிகளுக்கு தடையின்றி பேருந்துகள் சென்று வந்தன. மேலும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரித்தது, இந்நிலையில் அறந்தாங்கி பணிமனையில் கழிவு செய்யப்பட்ட 6,24,26 ஆகிய தடம் எண் கொண்ட நகரப் பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளையோ அல்லது நீண்டதூரம் சென்ற பேருந்துகளையோ நகரப் பேருந்துகளாக மாற்றி கொடுக்காமல், புதுக்கோட்டை பணிமனையில் இயங்கி, கழிவு செய்யும் நிலையில் உள்ள பேருந்துகளை போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.

ஏற்கனவே பழுதடைந்த பேருந்துகளுக்கு மாற்றாக அதைவிட பழுதடைந்த பேருந்துகளை இயக்குவதால், அந்த பேருந்துகள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால் அந்த பேருந்துகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்வதில்லை.இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எனவே தற்போது இயக்கப்பட்டு வரும் 6,24,26 ஆகிய தடம் எண் கொண்ட நகரப் பேருந்துகளுக்கு பதிலாக தற்போது இயங்கி வரும் புதுக்கோட்டை பணிமனையில் இயங்கிய பழைய பேருந்துகளுக்கு பதிலாக வேறு பேருந்துகள் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments