மணமேல்குடி ஊராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல் நாற்காலிகளை உடைத்து வீசியதால் பரபரப்பு



மணமேல்குடி ஊராட்சி அலுவலகத்தில்அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நாற்காலிகளை உடைத்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சக்குடி வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் மணமேல்குடி முன்னாள் ஒன்றிய தலைவர் பரணிகார்த்திகேயன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நாராயணன் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுவை வாபஸ் பெறுதல் மற்றும் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.

நாராயணன் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்காக நேற்று மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். அவர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்தபோது அங்கிருந்த மணமேல்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் துரைமாணிக்கம், அவர் மனுவை வாபஸ் பெறக்கூடாது எனக்கூறி அதனை பிடுங்கி கிழித்து போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

நாற்காலிகள் உடைப்பு

அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து தூக்கி வீசினர். அப்போது அறையில் இருந்த அலுவலர்கள் அனைவரும் சிதறியடித்து ஓடினார் கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் அனைவரையும் வெளியேற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மூடினார்கள்.இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம், அ.தி.மு.க. நிர்வாகிகள் உலகநாதன், செந்தில்முருகன், முத்துராமன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மகேஸ்வரன், குமார், சுப்பிரமணி, சுயேச்சை வேட்பாளர் இளமாறன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் அங்கு வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெறவில்லை. பின்னர் வேறு அறையில் சின்னம் ஒதுக்கும் பணிகள் இரவு வரை நடைபெற்றது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாக்குதல் நடந்த அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments